Wednesday, January 15, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -015

துரியோதனன் வெகுண்டு விதுரனை ஏசுதல்

149 ( அ)

வயிறை யெமக்கும் மனதை  யவர்க்கும்,
துயரம் எமக்கும் சுகத்தை யவர்க்கும்
இயம்பும் மனதை  எளிதில் அறிவோம் 
மயங்கோமுன் மாயவுரை கண்டு.  

திருதராட்டிரன் மனம் மாறாது தூது செல்ல பணித்தல்


149
என்று விதுரன் இயம்பிட முன்னோனும் 
சென்று வருகதம்பி சிந்தையில் மாற்றமில்லை
அன்று விதித்ததை இன்று தடுப்பதோ
என்றும் அதுதான் எளிதாமோ  நம்மையும் 
வென்று  நடக்கும்  விதிவழி நாம்செல்வோம்
என்றனன்  மன்னன் இயைந்து. 

150.
முந்திப் பிறந்தோன் மொழியால் விதுரன்
சிந்தை நிலையிழந்தான் தீதுடை தூதேற்று 
விந்தை இதுவென்றான் வீண்பழிக்கு அஞ்சிவிதி 
உந்தும் நிலையில் உலைந்து


விதுரன் இந்திரபிரஸ்தம் அடைதல்

151
போருக்கு அச்சாரம்  போடும் விதிநொந்து
தேருள் அமர்ந்து வருந்தியே தேம்பினன்
தாருடை வேந்தன் தருமன் நகர்நோக்கி
சாரும் பொழுதினில்   தான்

இந்திர்பிரஸ்தத்தின்  வளமைக் காணுதல்

152.


நால்வகைச்  சேனை நடக்கப் பெருவீதி
கால்கை முளைத்த கருங்குன்றம் போலானை,
சூல்கொள் மரங்கள் சூழ வளர்ந்தோங்கும்
சாலைகள் தானமைந்த நாடு

153
ஓதிடும் பாடங்கள் ஓடிசெவி உள்நுழையும்
சோதிக்க எண்ணி   தொடரப் பயிலரங்கில் 
மோதிடும் ஆயுதங்கள்  மொத்தமாய் போர்மன்றில் 
மோதிட யார்வருவார் முன் 

154

நீலமுடி கொண்டு நீள்வரையின்  மீதினில் 
கோலமுறு பன்மரங்கள் கோகிலம்போல்  கார்முகில்கள்
சாலம் பலகாட்டும் சந்திரனும் சாய்ந்துறங்க
ஞாலத்தைக் காத்திடும் நாரணனன் போலுயர்ந்து
சாலங்கள் காட்டும் தழைத்து 


155

கொண்ட(து) அனைத்தும்  குறைவின்றி கொடுத்திடும்
தண்ணெழில் கொஞ்சிடும் விண்நகரை  மிஞ்சிடும்
நீண்டு விரியும்  நியமங்கள் பேரழகாய்த் 
தீண்ட மகிழ்ந்தான் சிறிது. 

156

பாரத நாட்டினைப் பாரிகழ பல்வகைச்
சோரமுடைச் செய்கை சுயோதனன் சொல்கிறான்  
பாரதைத் தூதென்று  பாவியேன்  செய்கிறேன்
கோரவிதி தன்னில் குலைந்து


பஞ்சவர் மாளிகை பார்

157.
அந்தி மறைந்திடும் அந்நேரம்  மாளிகை 
முந்தி  அவன்கண் முன்னிட சந்திக்க
வந்த விதுரனைக் கண்ட  தருமனும் நல்லதாய் 
தந்தான் வரவேற்புத் தான் 

158

விதுரனை தானும்  எதிர்கொண்ட ஐவர்
சதுரங்கச் சேனையுடன் தான்முந்திச் சென்றார்
எதிர்கொண்டு வந்தோர்க்கு   ஏந்தல் விதுரன்
மதுர மொழிசொன்னான் மற்று 


159
தங்கப் பதுமையென தையலுடன்  ஐவரும் 
அங்கவன் தாளை  அடிபணிய அங்கம்
குளிர்ந்துநல் வாழ்த்துகள் கூறினான் அன்பினில்
துளிர்க்கும் கண்ணீர் துடைத்து. 


160
குந்தியைக் கண்டங்கு கோமகன் தாள்பணிந்து
வந்தனை செய்தான் வளைந்து 

விதுரன் தூதுரைத்தல்

161.
வாழ்த்தினன் அண்ணனின் வாழ்த்தை வழங்கினன்
ஏழ்மை மனத்துடன்  ஐவரை நோக்கினன்
தாழ்த்தினன் தன்தலை, தீதுடை தூதுரைக்க
வாய்த்த விதியை  மதித்து.


162

ஆழ்கடல் தன்னில் அமிழ்ந்திடும் ஓடம்போல்
ஆழ்ந்தனன் சிந்தையில் ஆவி கலங்கினன்
தேய்ந்தது நெற்றியும் தேய்த்த விரல்களால்
காய்ந்தனன்  உள்ளம்  கனன்று

163.
வருவது யாவும் வருந்திடப் போமோ?"
மருகும் மனதை மனத்தால் ஒதுக்கி
செருதரு செய்கையை செய்ய முனைந்தான்
தருமத்தின் முன்மகன் தான்.

No comments:

Post a Comment